இறுதிப்பயணம்
V.S. செல்வன்
அவன் கண்விழித்து தன்
கைக்கு அருகில் கிடந்த நீண்ட மூங்கில் குச்சியை எடுத்தான். பக்கவாட்டில் மறைவுக்காக
தொங்கிக்கொண்டிருந்த கோணிச்சாக்கை குச்சியைக்கொண்டு தூக்கிப் பார்த்தான் இன்னும் விடியவில்லை. அம்மா வருவாளா? கடைசியாக வந்து இருபதுநாளாவது
இருக்கும். அவன் உடல் அழுக்குப்படிந்து
உடலெங்கும் கடுமையான அரிப்பு எடுத்தது, நெஞ்சுக்குகீழ் ஏதோஒன்று படுக்கையில் கிடந்து ஒருவாரமாக குத்திக்
கொண்டிருக்கிறது. அவன் கைகளை ஊன்றி எவ்வளவோ முயன்றும் அவனால் அதை
எடுக்கமுடியவில்லை. நீண்ட பெருமூச்சு விட்டு அமைதியானான் தன்னால் அனைவருக்கும்
எவ்வளவு துன்பம் என நினைத்தபோது அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தன் கைக்கு
சற்று தூரத்தில் இருந்த சாப்பாட்டுத் தட்டை குச்சியால் தட்டித்தட்டி இழுத்துத் தன்
முகத்தருகே வைத்துக்கண்டான். இடுப்பை ஒட்டிய படுக்கையில் கழுவிவைத்த சொம்பை வலது
கையில் தடவி எடுத்து தலைக்குப் பக்கவாட்டில் இருந்த வாளியில் சொம்பை விட்டு நீரை அள்ள முயன்றான். தண்ணீர் அடியில்
இருந்ததால் கையை ஆட்டி ஆட்டி ஒருவாராக அரை சொம்பு அளவிற்கு தண்ணீரை எடுத்தான். தன் தலைக்கு மேல் கீற்று கூரையின்
இறக்கத்தில் கீற்றுகளிடையே
சொருகியிருந்த பல் பொடியை எடுத்து பல்லை விளக்கி தட்டில் துப்பி அதிலேயே
முகத்தையும் கழுவிக்கொண்டான். அவனுக்கு முன்னால் தொங்கிய பல துணிகளில் முகம் துடைக்கும் துணியை
எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். முகம் சவரம் செய்யப்படாமல் தலை முடி காடு போல் வளர்ந்து
பிசுபிசுப்பாக இருந்தது.
அவன் குடிசை தெருவின் வலப்புறத்தில் நடுப்பகுதியில் இருந்தது.
வீட்டைச்சுற்றிலும் கருவேல முட்கள் வளர்ந்து இவன் குடிசை மட்டும் தனியாக முன்னே நீண்டிருந்தது. தெருவாசிகள் யாரும் அவன் குடிசை அருகில்
வருவதில்லை. காரணம் கடுமையான வீச்சம் அடிக்கும். மற்றொன்று அவன் குடித்துவிட்டுச் சத்தம்
போடுவான் இருப்பினும் சிலர் அவ்வப்போது கருணையோடு சில உதவிகளை செய்து வந்தனர்.
அவன் கொடுக்கும் ஐம்பது
பைசாவுக்காக மகாலிங்கத்தின்
கடைசிமகள் தன் வீட்டிற்கு டீ வாங்கச் செல்லும்பொழுது அவனுக்காக வாங்கி கொடுப்பாள்.
பாஞ்சாலை அம்மா அவனுக்கு ஒருவாளி தண்ணி எடுத்துக் கொடுப்பாள். அந்த ஒருவாளித் தண்ணீரில்தான்
பாத்திரம் கழுவுவது பல் துலக்குவது என்று ஒரு நாள் முழுக்க ஓடும். மற்றபடி யார்வீட்டிலாவது நல்லது பொல்லது
செய்தால் இலையில் வைத்துத் தள்ளிவிட்டுப் போவார்கள். அவன் அம்மா வந்தால்தான்
அவனால் மலம் கழிக்க முடியும். கவிழ்ந்து படுத்த நிலையில்
கடதாசியில் கட்டி அதைத் தூர எறிவது மிகவும் சிரமம். அந்த ஒரு கணத்தை நினைக்கும்பொழுது அவனால் சாப்பிடவே
முடியாது. எதை வாயில் வைக்கும் பொழுதும் அடுத்த
நாள் ஞாபகம் தான் அவன் கண்ணெதிரே வந்து போகும். தூக்கு கூஜாவைத் தூக்கிக்கொண்டு மகாலிங்கம் மகள் அவன் குடிசைக்கு வெளியே நின்றபடி மூக்கைப் பொத்திக்கொண்டு மாமா… காக்கா மாமா….. என்றாள் அவனை அனைவரும் காக்கா காக்கா என்றே
அழைப்பார்கள். அவன் அண்ணனைப் பெரியகாக்கா என்றும் இவனைச் சின்ன காக்கா என்றும்
அழைப்பார்கள். தன்னை ஏன் காக்கா என்று
அழைக்கிறார்கள் என்பதை அவன் ஒரு நாளும் நினைத்து பார்த்தது கூட கிடையாது. அவள் சத்தத்தை கேட்டதும் அவன் “வா.. தாயி உன்னத்தான்
பாத்துக்கிட்டு இருந்தேன்” என்று குப்புறக்
கவிழ்ந்துகிடக்கும் அவன் உடலை இடக்கையை ஊன்றித்தூக்கி நெஞ்சுப்பகுதியில்
தலையணையாக வைத்திருந்த அந்த அழுக்கடைந்திருந்த தலையணையின் உறையில் வலக்கையை நுழைத்து
ஒரு ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினான். இடதுகை அவன் உடல் பாரம் தாங்காது
நடுங்கிக்கொண்டிருந்தது. அவள் காசை வாங்கிக் கொண்டதும் சொம்பு என்றாள். அவன் சொம்பைக்
கொடுத்ததும் வாங்கிக்கொண்டு அவள் அம்மா பார்க்கிறாளா என்று நோட்டமிட்டு ஒரே
பாய்ச்சலாக ஓடிப்போனாள்.
அப்போது அவனைக் கடந்து
சென்றுகொண்டிருந்த அவன் அம்மாவோடு மில்லில் வேலைசெய்யும் ஜோதிவேலை நோக்கி
மில்லுகார மாமா, என்று அழைத்தான். அவர். வேறு வழியின்றி என்ன மாப்ள என்றார். மாமா உடம்பெல்லாம் ஒரே அரிப்பா இருக்கு வெண்ணி
வச்சு உடம்பதொடைக்கணும் இருபது
நாளுக்கு மேல ஆச்சு எங்க அம்மாவ பார்த்து வர சொல்லுங்க மாமா என்றான். சொல்றேன் மாப்பிள்ளை என்று நகர்ந்து சென்றார் அவர் சென்றவுடன் தன்
படுக்கையை ஒட்டிய வலதுபுறததில் நெருப்பெறும்புகள் சாரைசாரையாகச் செல்வதைப்
பார்த்தான். கண்களை கூர்மையாக்கி அதன்
வழித்தடத்தின் எதிர்திசையில் கண்களை ஓட விட்டான் அவன் இடுப்புப்பகுதி வரை மட்டுமே அவனால் தலையைத்
திருப்பிப் பார்க்கமுடிந்தது. அதையும் தாண்டி அவை
தொலைவிலிருந்து வந்துகொண்டிருந்தன. நெருப்பெறும்பு என்றாலே அவனுக்கு பயம் உணர்ச்சியற்ற அவன்
உடலை அவை எப்போதும் தின்று தீர்க்கின்றன. கையில் குச்சியை எடுத்து தட்டி கூரையில்
சொருகி இருந்த எறும்பு மருந்தை எடுத்துக்கையில் வைத்துக்கொண்டான். அவள் சொம்பின் மேல் கவிழ்த்த துண்டு வாழை
இலையுடன் தன் கை விரல்களை அகலவிரித்துத் பிடித்தபடி டீ சொம்பை அவனிடம் நீட்டினாள். அவன் “ஆயி நெருப்பெறும்பு ஊறுது அது எங்கன்னு பார்த்து இந்த
மருந்தை போட்டுட்டு போயிறு தாயீ” என்றான்.
அவள் சற்றே அசூயையுடன் அவன் மேல் பரிதாபப்பட்டு மூக்கில் கைவைத்தபடி எங்க என்றபடி
கவிழ்ந்துகிடந்த அவன் உடலை நோட்டமிட்டாள். குப்புறப்படுத்து நெஞ்சில் தலையணை வைத்திருக்கும்
அவன் இடுப்பைச்சுற்றி சிறிய துணி மட்டும் போர்த்தப்பட்டிருந்தது பிறண்டு கிடக்கும்
கால் முட்டிக்கு அடியிலிருந்து எறும்புகள்
ஊர்ந்து வந்துகொண்டிருந்தன. சூம்பிக் கிடக்கும் அவன் கால்கள் பயன்படுத்தப்படாத்தால்
எலுப்புகள் விரைத்துக்கொண்டு கால்விரல்கள்
முறுக்கிக்கொண்டு கட்டைபோல் கிடந்தன. எறும்பின் தடங்களை தொடர்ந்து
நோட்டமிட்டுகொண்டே சென்றாள் அவை கணுக்காலுக்கு மேல் எலும்பின் அடியிலிருந்து
சதைகளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தன கால் முழுவதும் அவைக் கடித்துக்கடித்து நெருப்பில்
சுட்டது போல் சிவந்து திட்டுத்திட்டாக அவன் கால்கள் கிடந்தன. அவள் ஒருவழியாக மூக்கை பொத்திக்கொண்டு
கால்களில் மருந்து போட்டாள் எறும்புகள் உடலை சுறுக்கிக்கொண்டு விழுந்தன. அதற்குமேல் அவளால் அங்கு நிற்க
முடியவில்லை டீ ஆறிப்போனா அம்மா சத்தம் போடும் என்று கூறி ஒரே ஓட்டமாக ஓடிப்போனாள்.
எதிர் வீட்டு சாமிய்யா கடைத்தெருவிலிருந்து அப்போதுதான் வந்திருந்தார் சாமியாண்ணே என்று கத்தினான். என்னடா என்று அவர்
திரும்பிக் கேட்டார். எங்க அம்மாவ பாத்தியா? வந்து இந்த உடம்ப தொடைச்சு விட்டு போனா
என்னண்னே. நெருப்பெறும்பு கால்ஃபுல்லா
கடிச்சிடுச்சு துணியை மாத்தணும் எவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுது பாத்தியாண்ணே. தனியாதானே
கிடக்குறேன் வந்து ஒரு உதவி செய்யக்கூடாதா அந்த பொம்பள என்று அலுத்துக் கொண்டான். ஏய் அதுக்கு ஒருவாரமா மேலுக்கு
முடியலையாம் நீ நல்லாயிருந்த்தப்ப அவளுக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்தியிருப்பியா ஊட்ல
கூட வச்சிக்காம மில்லுலேயே தங்கவிட்டுட்டே, நல்லா இருந்தா வராதா?
அதுக்கு என்னன்னு யாருக்குத் தெரியும். என அவர் கூறியதும். மேற்கொண்டு பேசமுடியாமல் மொளனமாகிப்போனான்.
முனியம்மாவிற்கு இரண்டு
மகன்கள் மூத்தவன் அரிசி மில் டிரைவர் இவன் இரண்டாவது. முனியம்மாவின் புருஷன்
குடிகாரன் குடித்து குடித்து அனைத்தையும் அழித்து செத்துப்போனபின் தன் இரண்டு மகன்களுடன் அரிசி மில்லுக்கு
வேலைக்கு போனவள் அங்கேயே அவர்களை நெல் மூட்டைகளுடன் தங்க வைத்துக் கொண்டு வேலை
பார்த்தாள். மூத்தவன் வளர்ந்து பெரியவனானதும் அரிசி மில் டிரைவரானான் பிறகு
அவனுக்குத் திருமணம் ஆனபின் அவனுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று இருவரும்
மில்லிலேயே தங்கிக்கொண்டார்கள். முனியம்மாவின் நேர்மைக்காகவும் அவ்வப்போது
நடக்கும் நெல்திருட்டைத் தடுக்கவும் அவர்கள் அங்கு தங்கியிருப்பது அவள்
முதலாளிக்கு வசதியாக இருந்தது. மேலும் முனியம்மாவின்மேல் தனிப்பட்ட கருணையையும்
அவருக்குண்டு. அவர் மில்தொழிலைத்தாண்டி
ரோட்டோரத்தில் கிடந்த பத்து ஏக்கர் நிலத்தில் பன்னீர்செல்வம் என்ற டீலக்ஸ்
தியேட்டரை கட்டியிருந்தார். டூரிங் தியேட்டரில் படம் பார்த்தவர்கள், நாற்காலி
போட்டு படம் காட்டியவுடன் இவரது தியேட்டரில் கூட்டம் அள்ளியது. தியேட்டர் தொழில்
அவருக்குப் பெருமையாகவும் இருந்தது. முனியம்மாவுக்கு இரண்டு இடத்திலும் வேலை
கொடுத்திருந்தார். தியேட்டர் கூட்டுவது, பெண்கள் கழிவறையைப்
பராமரிப்பது.
திருக்காட்டுப்பள்ளி
ரோட்டில் புதுத்தெருவுக்கு நுழையும் இடத்தில் உள்ள புளியமரத்தடியில் ஒரத்தூரிலிருந்து
வந்த ராதா டீக்கடை தொடங்கினார். அவர் வருகைக்கு முன் தெருவாசிகள் டீ குடிக்க
வடக்கே சேவுசெட்டியார் கடை அல்லது தெற்கே ரயிலடிக்குத்தான் செல்லவேண்டும். சுமார் ஒன்னரைக் கிலோமீட்டர் நடந்து
சென்று டீ குடித்து வந்தவர்களுக்கு ஒரத்தூரார் கடை வந்ததும் அங்கேயே அனைவரும் டீ குடிக்க
தொடங்கினார்கள். காலைவேளையில் அவர் கடைக்கு அருகில் இருக்கும் பட்டுக்கடையில் வெற்றிலை சீவல்
வாங்கிக்கொண்டு அவர் கடையில் டீ குடித்துவிட்டு வயல் வேலைகளுக்கு செல்வது வழக்கம்.
புளியமரத்தடியில் அனைவரும் குடும்பம் குடும்பமாக சுத்தி அமர்ந்தபடி டபராவில் டீ ஆர்த்தி குடித்துக்கொண்டிருப்பார்கள்.
சிலர் சொம்பு, கூஜாக்களில் பார்சல் வாங்கிச் செல்வார்கள். அவர் பாய்லரில் எப்போதும் நெருப்பு கனன்று
கொண்டே இருக்கும். அன்று காலை முனியம்மாவும்
டபராவில் டீ வாங்கி
சேகருடன் ஆளுக்கு ஒரு மிடறு
குடித்துக் கொண்டிருக்கும்போது அவன் அம்மாவிடம் தான் தியேட்டரில் வேலை பார்க்க
வேண்டும் என்ற ஆவலை தெரிவித்தான். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை அவன் சிறுவனாக
இருந்தபோது பழைய டூரிங் தியேட்டரில் சிகரெட் அட்டை பொறுக்கப்போகும் பொழுது இரண்டு
பெரிய சக்கரங்கள் போல் இருக்கும் அந்த ஆப்ரேட்டர் அறையிலிருந்து பளிச்சென்ற
ஒளியில் பெரிய அளவில் தெரியும் படத்தை கண்டு இதே போலத்தானும் படம் ஓட்ட வேண்டும்
என்ற ஆசை அவனுக்கு வந்தது. அவளும் சற்று யோசித்து தியேட்டர் வேலை என்றால் அவனுக்கு
திருமணத்திற்கு நல்ல பெண்ணாகக் கிடைக்கும் என்று எண்ணினாள். அன்று காலையிலேயே
முதலாளி தியேட்டருக்கு வந்திருந்தார். பெரியஅளவில் உள்ள வெங்கடாஜலபதி படமும், என்னைப்பார்
யோகம் வரும் எனும் இருகழுதைகள் படமும் மாட்டப்பட்ட அறையில், சுழல் நாற்காலியில் அமர்ந்து கலெக்க்ஷன் பணத்தை
எண்ணிக் கொண்டிருந்தார். முனியம்மா மெதுவாக சாமி என்றாள். முதலாளி டிராயரில்
பணத்தை வைத்து விட்டு என்ன முனியம்மா உள்ளே வா என்றார். என்ன ஏதும் உடம்பு
சரியில்லையா என்றார். இல்லசாமி சின்னபய தேட்டருலவேலபாக்கணுங்கிறான் என்று இழுத்தாள்.
அதற்கு அவர் அவன் மில்லுல நல்லாதானே வேலபாக்குறான் நல்லபடியாக சம்பாதிக்கிறான்
என்றார். சாமி அவனுக்கு கல்யாண
வயசாயிடுச்சு ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன் தியேட்டர்ல வேலன்னு
சொன்னா நல்ல பொண்ணா கிடைக்கும் என்றாள். அவளுடைய வார்த்தையை அவரால் தட்ட
முடியவில்லை. எனவே நீண்ட
யோசனைக்குப்பிறகு சரி அவன வர சொல்லு
என்றார். அவள் வேகமாக வெளியே சென்று சின்னபயலே....
சேகரு... என்று அழைத்தாள். அவன் வேகமாக ஓடி வந்து துண்டை கக்கத்தில் வைத்து வணக்கம் சாமி என்றான். டேய் உங்கம்மாவுக்காக
டிக்கெட் கிழிக்கிற வேலைதர்றேன் எவனாவது மாமா மச்சான் தெரிஞ்சவன்னு டிக்கெட்
இல்லாம உள்ள விட்டே
கட்டிவச்சுத்தோலை உரிச்சுபுடுவேன்
இன்று கடுமையாக கூறினார். இல்லசாமி அப்படியெல்லம்
இருக்கமாடேன் சாமி என்று கும்பிட்டான். அன்று மாலை அவனுக்கு புதுக்கைலியும் நல்ல அண்ட்ராயரும் ஓட்டை வச்ச முண்டா பணியனும்
புதிதாக வாங்கிக் கொடுத்தாள் முனியம்மா. அன்று முதல்நாள் வேலை பெண்கள் கவுண்டரில் டிக்கெட்
கிழிப்பது இவன்வேலை பெண்கள் கூட்டம் அலைமோதியது. அந்த இரண்டு அடி அகலத்தில் நீண்டு
கிடக்கும் அந்த டிக்கெட் கவுண்டரில் தகரக்கதவை திறந்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடி பெஞ்சு
பக்கம் கதவில் நின்று டிக்கெட் கிழிக்கவேண்டும். பலவித பெண்கள் புடைசூழ டிக்கெட்கிழிக்கும்
அந்த வேலை அவனுக்கு
மிகவும் பிடித்திருந்தது.
முனியம்மா ஒருவராக கோயிலடியில் சென்று
இவனுக்குப் பெண் பார்த்தாள். இவனை விட அவள் ஐந்து வயது சிறியவள் பார்ப்பதற்கு நல்ல சிவப்பாக, சினிமா நடிகை மாதிரி இருந்தாள். அம்மன் கோயிலில் சிறிய அளவில் தாலிகட்டிக்கொண்டு, தெருவின்
மையப்பகுதியில் கிடந்த பொறம்போக்கு நிலத்தை ஒட்டிய இடத்தில் இருவரும் ஒரு சிறிய
குடிசை போட்டுக்கொண்டு குடும்பம் நடத்த தொடங்கினர். அவன் எப்போதும் பொண்டாட்டிய கீழே இறக்கி
விடுவது இல்லை என்று ஊரார் பேசும் அளவிற்கு அவளை வைத்துத்தாங்கினான். அடிக்கடி
அவளை தஞ்சாவூர் அழைத்து செல்வது ஹோட்டலில் சாப்பிடுவது என்று மிக சந்தோசமாக அவளை
வைத்திருந்தான் இருந்தாலும் அவன் சினேகிதர்கள் யாரையும் அவன் திருமணம்
ஆனதிலிருந்து கூப்பிடுவதில்லை தள்ளுவண்டி பட்டாணி பாண்டி, வெங்காய மண்டி குரு, இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்ணு
மண்ணாகத் திரிந்தவர்கள். அவர்கள் தன் வீட்டுக்கு வந்தால் தன் மனைவி கைமாறி
விடுவாளோ? என்ற அச்சம் அவன் மனதில் ஆணியாக தைத்து இருந்தது. அதற்குத் தன் மனைவி மிகவும் அழகாக
இருப்பது ஒரு காரணம். அவர்களை வெளியில் தியேட்டரில் சந்தித்து பேசுவதோடு சரி. சேகர் அவளிடம் ஒரு விஷயத்திற்கு கடுமையாக
கோபப்படுகிறான் என்றால் அது அடுத்த ஆடவனிடம் அவள் பேசும்போதுதான். முனியம்மாவையும்
வெறுப்புடன் நடத்தி அவளை வீட்டுப்பக்கம் வராதவாறு பார்த்துக் கொண்டான். அவளும்
அவர்கள் நல்லாயிருக்கட்டும் என்று மில்லிலேயே தங்கிக்கொண்டாள். தனக்கு உடல்நிலை
சரியில்லாதபோதும் கூட அவன் வந்து பார்க்கவில்லை என்பது அவளுக்குக் கவலையாக
இருந்தது. தன் எதிர்
வீட்டு சாமிய்யா அண்ணனிடம் அஞ்ச,பத்த கொடுத்து விடுவான்
முனியம்மா ஒருமுறைகூட அதை வாங்கியதில்லை.
அன்று வழக்கம்போல்
இரண்டாவது ஆட்டம் முடித்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். தியேட்டர்
வாசலில் இருந்து தார் ரோடு வரை மணல் சாரி. சைக்கிள் எவ்வளவு மிதித்து அழுத்தினாலும் சக்கரம் நகராமல்
வளைந்து நெளிந்து ஆளைத்தள்ளிவிடும் வண்டி நகரவே நகராது ஆனால் அவன் ஒவ்வொரு நாளும் சைக்கிளில்
ஏறி மிதித்து கால்களை ஊன்றிவிடாமல் எப்படியாவது சைக்கிளை ஓட்டி விடுவான். அன்று
புதுப்படம் போட்டிருந்ததால் கும்பல் அதிகம். ரெண்டாம் ஆட்டம் டிக்கெட் கிழித்து
களைப்படைந்து போயிருந்தால் முண்டா பனியன் அனைத்தும் தொப்பலாக நனைந்து போயிருந்தது
தன் மனைவியும் காத்திருப்பாள் என்ற எண்ணமும் அவனை விரைவாக வீட்டிற்குச்செல்லத்
தூண்டியது. ஒருவழியாக மணல்சாரியை முண்டி மிதித்து வெளியேறினான், தார்ரோடு
தரையை விட சற்று உயரமாக இருந்தது எலெக்சன் வருவதால் தற்போதுதன் குண்டும் குழியுமாக
இருந்த ரோட்டை ஜல்லி போட்டுத்திருத்தி ரோடுரோலர் விட்டு சமப்படுத்தி இருந்தார்கள். இருந்தாலும் ரோட்டின் ஓரப்பகுதிகள் மண்ணைப்
போட்டு சமப்படுத்தாமல் ரோட்டின் ஓரத்தில் தார் பட்டும்படாமலும் ஜல்லிகள் கத்தி மாதிரி
நீட்டிக் கொண்டிருந்தன. இருட்டு நேரம் என்பதால்
சைக்கிளை நிதானமாக தட்டுத்தடுமாறி ஓட்டிக்கொண்டு வந்தான். மண் ரோட்டில் இருந்து தார் ரோட்டுக்கு
சைக்கிளை ஏற்றும் பொழுது தார்ரோடு சற்று உயரமாக இருந்ததால் சீட்டை விட்டு எழுந்து
நின்று வலுவெல்லாம் ஒன்று சேர்த்து சைக்கிளை மிதித்தான். சைக்கிள் தடுமாறி முன் சக்கரம் மட்டும்
ரோட்டில் ஏற, பின் சக்கரம் ஏற
முயலும்போது நீட்டிக் கொண்டிருந்த ஜல்லியில் இடறி நிலைதடுமாரி விழுவதற்கும் லோடு
லாரி விரைவாக வருவதற்கும் சரியாக இருந்தது. லாரி ஒரே அடியாகஅடித்து சைக்கிளை தூக்கியெறிந்தது அவனை
சற்று தூரம் இழுத்துச் சென்று ஒரு சுழற்று சுழற்றி இடுப்பை ஒரு அடி அடித்து ஓரத்தில்
தூக்கியெறிந்தது. ரோட்டில் கடையடைத்துத்
திரும்பியவர்கள் பார்த்து தகவல் சொல்லி பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.
கண் முழிக்க மூன்று நாள் ஆகியது இடுப்பு பகுதியில் தண்டுவடத்தில் எலும்புகள்
நொறுங்கி போயிருந்ததால் இடுப்புக்குக் கீழ், கட்டைபோல் சுரணையற்றுக்கிடந்தது.
ஆஸ்பித்திரியில் இனி ஒன்றும்முடியாது என்று வீட்டுக்குத் தூக்கிச் செல்ல
சொல்லிவிட்டார்கள். அவன் குடிசைத்திண்ணையில் படுக்கை
விரித்து ஒரு ஓரமாக கிடத்தப்பட்டு இருந்தான். அடிபட்ட காசு கோர்ட்டில் இருந்து
வந்தால் ஒருவேளை தள்ளு வண்டியில்
உட்கார்ந்தபடி கையில் தள்ளிக்கொண்டு செல்ல முடியும் என மருத்துவர்கள்
கூறியிருந்தார்கள். என்ன நடந்தது என்பதை
அவனால் யூகிக்கவே முடியவில்லை.
தான் இவ்விதம் இருப்பதை
அவனால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை மனம் துடிப்புடனும் இடுப்புக்கு கீழே உடல்
செத்துப் போயும் கிடந்தது. யாரைப்பார்த்தாலும்
நாநல்லாயிருவனா? என்றே கேட்டுக்கொண்டிருப்பான். அவனுக்கு அடிக்கடி கோபமாக
வந்தது அனைவரையும் திட்டி தீர்த்தான். அவன் மனைவி கண்ணீர் விட்டு பார்த்தாள். பல கோயில்களுக்கு நேந்துகொண்டு
போய்ப்பார்த்தாகிவிட்டது ஒன்றும் பலனில்லை, இது தீர கூடிய நோயல்ல என்பது புரிந்ததும் தன் வாழ்க்கையே
வீணாகிப் போனது போல உணர்ந்தாள். இருப்பினும் அதை அவள்
காட்டிக் கொள்ளாது முழுமையாக ஆறு மாதங்களை கடத்தியிருந்தாள். அவன் இயலாமையுடனும்
மனவேதனையுடனும் வளர்ந்துவிட்டிருந்த சந்தேகப்பார்வையும் அவளை வேசி என்றே எண்ணவைத்த
காரணத்தால் அவனோடு வாழமுடியாமல் தன் தாய்வீட்டுக்கு போனவள்தான் திரும்ப வரவே இல்லை. அவன் அம்மா முனியம்மா எப்போதாவது வந்து
அவனை துடைத்துவிட்டு துணி மாற்றி விட்டுச் செல்வாள். அவனின் இந்த மோசமான நிலையுடனும்,
தன்னைக்காப்பாற்ற யாருமில்லை என்று நெல்மூட்டைகளோடு தன் உடலை புதைத்துக் கொள்வாள்.
அன்று இரண்டாம் தவணையாக
அவனுக்கு இருபதாயிரம் ரூபாய் அடிபட்டகாசு கோர்டுமூலம் வந்திருந்தது. காலையிலேயே
அவன் குடிகார நண்பர்கள் வந்து அவனை குளிப்பாட்டி தூக்கி வைத்து விட்டு போனார்கள். அன்று காலையிலேயே கடையில் சரக்கு வாங்கி
வரச்சொல்லி முடிந்தவரை குடித்தான் மலையாளத்தார் கடை பிரியாணி வந்திருந்தது. போதை சற்று அதிகமானவுடன் மிக சத்தமாக
பாடினான் “தலிக்கு மேலே வெல்லம் போனால் ஜானென்ன முலமென்ன” பத்துமணிக்கு ஊர் அடங்கிய பிறகு அவன் மனசு அறுத்தது. அவளை விபச்சாரி என்று பேசியிருக்க கூடாது
என்று எண்ணினான். தப்பு பண்ணிட்டேன் என்று கத்தி அழுதான். அவளும் வயசு பொண்ணு தானே நம்மளால ஒன்னும்
முடியல ஆனால் அவளை ஏன் மனம் பிறருக்கு தர மறுக்கிறது என்று எண்ணியபடி தன் நிலையை
எண்ணி நொந்துகொண்டான். அவள் இருந்தால் தன்னைப் பார்த்துக் கொள்வாள் குளிப்பாட்டுவாள்
துணிமணிகளை துவைத்துப்போடுவாள் என்று ஒருகணம் நினைத்தான். மறுகணம் நம்மோடு
சேர்ந்து இந்த துன்பத்தை அவள் ஏன் அனுபவிக்க வேண்டும் அவளாவது நன்றாக இருக்கட்டும் என்று எண்ணினான். இறுதியாக, இல்லை இவை
எல்லாவற்றுக்கும் காரணம் நாம் உயிரோடு இருப்பது மட்டும்தான் என்று நினைத்தான். அவன் என்றோ செத்துப்போயிருப்பான். அவன்
உயிரோடு இருப்பதற்கு காரணம் கேசில் இருந்து காசு வந்ததும் தள்ளுவண்டியில் அமர்ந்து
கைகளால் வண்டியை உருட்டிக்கொண்டு தியேட்டரைச்சுற்றி வரவேண்டும். என்ற எண்ணம்
மட்டுமே அவனுக்கு இருந்தது. எறும்பு அரித்த கால்களைப்
நினைத்த போது மூணு வருஷமா குப்பையிலே கிடக்கிறேன், கூப்பிடுகிறேன், ஒருமுறை மல்லாந்து படுத்து மோட்டுவளையை பார்க்க வேண்டும்
என்ற குறைந்தபட்ச ஆசையும் நிறைவேறாது. அது சாத்தியமில்லை என உணர்ந்தான். அவளோடு நெருங்கியிருந்தது முதல் அவளை வேசி என்று
திட்டியதுவரை நினைத்துக் கொண்டே கண்களில் நீர் வழிய அவன் கைகள் கூரையில் சொருகி
இருந்த எலி விஷத்தை தேடி எடுத்தது.
நீண்ட பெருமூச்சோடு
கண்களில் கண்ணீர் வழிய மீதம் இருந்த சரக்கை ஒரே வாயில் குடித்தான். பின் அதே டம்ளரில் மருந்தை கொட்டிக்கலக்கிக்
குடித்தான் தடித்திருந்த அவன் நாக்கிற்கு இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் வெட்டி,வெட்டி
இழுத்து வாயில் நுரை தள்ளி படுக்கையிலிருந்து சரிந்து கிடந்தான்.
தப்போசையும், வெடிச்சத்தமும்
விண்ணைப்பிளக்க மலர்த்தோரணங்கள் சத்தத்திற்கு ஏற்ப ஆடியபடி, சுடுகாடு
நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான் மல்லாக்கப்படுத்து வானத்தைப் பார்த்தபடி.
..............................................................................................................